அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிதி உதவி அளிக்க பயனாளியிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூ கநலத் துறை பெண் அலுவலர்கள் இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த கருப்பையனஅள்ளியைச் சேர்ந்தவர் ரங்கம்மாள் மகள் சாந்தாமணி. இவருக்கு கடந்த 2018, செப்டம்பர் 12 -இல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, அவர் படித்த பட்டதாரி பெண்களுக்கு அரசு வழங்கும் திருமண உதவித்தொகை ரூ. 50 ஆயிரம் மற்றும் தாலிக்கு தங்கம் பெற சமூக நலத் துறையில் விண்ணப்பித்தார்.
திருமணம் முடிந்து ஓராண்டு ஆகியும் இந்த நலத் திட்ட உதவி அவருக்குக் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், பென்னாகரம் சமூக நலத் துறை அலுவலர்கள் இருவரிடம் கேட்டபோது, ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வழங்குமாறு கூறினராம். இதை ஏற்க மறுத்த சாந்தாமணியின் சகோதரர் செல்வகுமார், தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரம் பணத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பினர். அதன்படி, ரங்கம்மாள் புதன்கிழமை காலையில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத் துறைப் பிரிவில் பணியாற்றும் அலுவலர்கள் சரோஜா, சாந்தா ஆகியோரிடம் பணத்தை வழங்கினர். பணத்தை அவர்கள் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இருவரையும் கைது செய்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர்.