சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 800 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, அரும்பாக்கத்தில் அமைந்துள்ள யோகா மற்றும் இயற்கை வழி மருத்துவக் கல்லூரியில் இருந்து வரும் சிறப்புப் பிரதிநிதிகள் 10 பேர், மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளை அளிக்க உள்ளனர். அதேபோன்று யோகாவின் சிறப்புகள், நன்மைகள் குறித்து அவர்கள் மாணவர்களிடையே எடுத்துரைக்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் அடுப்பில்லாமல் செய்யப்படும் இயற்கை சமையல் போட்டி நடத்தப்பட உள்ளது.
அதில், மாணவர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக ஊழியர்களும், பேராசிரியர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யோகா சிறப்பு தின நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பதிவாளர் டாக்டர் எஸ். பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.