உலக அளவிலான மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம் மற்றும் உலக நீர்வாழ் உயிரின வளர்ப்பு சங்கத்தின் ஆசிய தொகுப்பு சார்பில் ஆசிய பசிபிக் நீர்வாழ் உயிரின வளர்ப்பு - 2019 என்னும் தலைப்பில், சென்னையில் 3 நாள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து பேசியது:
இறைச்சி உணவுகளில் மீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மீன் இறைச்சியில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்கள் மூலம் நாட்டின் பெருமளவு உணவுக்கான மீன் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன் முறையாக வணிக ரீதியான இறால் வளர்த்தல் கடந்த 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக அளவில் வளர்ப்பு இறாலைப் பொருத்தவரை, 75 சதவீத இறால்கள் ஆசியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் உள்நாட்டு மீன்கள் 66.81 சதவீத பங்கு வகிக்கின்றன. கடந்த சில வருடங்களில் உள்நாட்டு மீன்களில் நன்னீர் மீன்களின் பங்கு 80 சதவீதத்தை அடைந்துள்ளன.
மொத்தமாக மீன் பிடித்தல் மற்றும் மீன் வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு 12 மெட்ரிக் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம், மீன் வளர்த்தல் மற்றும் மீன் பிடித்தலில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்றார்
இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீன் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சியில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபெலிக்ஸ், ஓமன் நாட்டின் தூதர் தெங் தர் டெங், மத்திய அரசின் துறை செயலர் தருண் ஸ்ரீதர், துறைக்கான அரசு முதன்மைச் செயலர் கோபால், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக துணை இயக்குநர் ஜெனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.