நடிகர் சங்கத் தேர்தலை திட்டமிட்டபடி வரும் ஜூன் 23-ஆம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் வியாழக்கிழமை ஆஜரான நடிகர் விஷால் தரப்பு வழக்குரைஞர் கிருஷ்ணா, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தேர்தலை ஒத்திவைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தாக்கல் செய்யும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்காக தாக்கல் செய்தால் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மற்றொரு வழக்கு: இதேபோல், நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, ஏழுமலை என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்க உறுப்பினர்கள் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், உறுப்பினர்கள் பலருக்கு தெரியப்படுத்தாமல் அவர்களை நிர்வாகிகள் நீக்கியுள்ளதாகவும், இதுதொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.