புது தில்லி: தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் சார்பாக தற்போது திமுகவிலிருந்து திருச்சி சிவா மற்றும் கனிமொழி, அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் மற்றும் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்களில் கனிமொழி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.மீதமுள்ள ஐவரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூலை 1 முதல் 8 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. தேர்தல் ஜூலை 18-ஆம் தேதியன்று நடைபெற்று அன்றே முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது
ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய 34 எம்,எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், தற்போதுள்ள சூழ்நிலையில் திமுக மற்றும் அதிமுக இருவரும் தலா 3 எம்.பிக்களைத் தேர்வு செய்ய இயலும் என்று தெரிகிறது.