அனல் மின் உற்பத்தி நிலையங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டு அதனை முறையாகப் பராமரிக்க வேண்டுமென மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தினார்.
மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்த பணி ஆய்வுக் கூட்டம், அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி, வடசென்னை அனல் மின் திட்டம் நிலை-3 -இல் காணொலி மூலம் இணைந்து கருத்தரங்கு நடத்தும் வசதியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
மின் உற்பத்தியை மேம்படுத்தி செலவுகளைக் குறைத்தல், நீர் ஆதாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து அனல்மின் நிலையங்களிலும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், உப்பூர் அனல்மின் திட்டம், உடன்குடி அனல் மின் திட்டம் நிலை-1, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், குந்தா நீரேற்று புனல் மின் திட்டம், கொல்லிமலை நீர் மின் திட்டம், ஆகிய திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, 2018-2019 -ஆம் நிதியாண்டில் கொல்கத்தா துறைமுக பொறுப்புக் கழகம், ஹால்டியா துறைமுகத்தில் அதிக அளவிலான 25.30 லட்சம் டன் நிலக்கரியை கையாண்டதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்துக்கு விருது கிடைத்ததற்காக அதிகாரிகளை அமைச்சர் பாராட்டினார்.
இந்தக் கூட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குநர் சுபோத் குமார், அனைத்து திட்ட இயக்குநர்கள் மற்றும் மின் நிலைய தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.