ஈரோட்டில் அரசு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினரின் மகன் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு, குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, முன்னாள் மாணவ, மாணவியர் விலையில்லா மடிக்கணினி கேட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவ, மாணவியரிடம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது அங்கிருந்த செய்தியாளர்கள் தங்களது செல்லிடப்பேசியில் படம் பிடித்துள்ளனர். இதனால், கோபமடைந்த அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கினர்.
இதில் காயமடைந்த செய்தியாளர்கள் இருவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்தியாளர்களைத் தாக்கியதாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி உள்பட அதிமுகவினர் 5 பேர் மீது ஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.