எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்வதற்கான ஏற்பாட்டை மருத்துவக் கல்லூரி இயக்குநரக தேர்வுக் குழு செய்துள்ளது.
அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளன என்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://192.169.153.136/MBBSTRACKING2019/ என்ற இணையதள முகவரியில் அவற்றை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து அதனை தெரிந்து கொள்ள முடியும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளில், சிறப்பு பிரிவு மற்றும் பெருந்துறை ஐஆர்டி கல்லூரியின் தொழிலாளர்களின் வாரிசுகள் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 5-ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் திரும்பக் கிடைத்ததும், இரண்டாம் கட்ட கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.