கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியான அரபிக்கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மார்த்தாண்டன்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால், வியாகுல அன்னை தேவாலய கலையரங்கத்தின் ஒருபகுதி இடிந்து சேதமடைந்தது.
வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி பகுதிகளில் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு கடல் கொந்தளிப்பு அதிகரித்து காணப்பட்டது. நீரோடி பகுதியில் மீன் விற்பனை கூடமும், வள்ளவிளையில் சில வீடுகளும் அப்போது சேதமடைந்தன. இதையடுத்து, நீரோடி, வள்ளவிளை பகுதிகளில் முதல்கட்டமாக கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்காக பாறை கற்கள் போடப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், மார்த்தாண்டன்துறை பகுதியில் தூண்டில் வளைவு இல்லாத பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் சுமார் 30 அடி உயரத்துக்கு அலைகள்ஆர்ப்பரித்து எழுந்து கரையைத் தாக்கி வருகின்றன. ஆக்ரோஷமாக எழும் கடல் அலையால், அப்பகுதியில் உள்ள தேவாலய கலையரங்கத்தின் ஒரு பகுதி சேதமடைந்து இடிந்து விழுந்தது. மேலும், கடற்கரையோரம் உள்ள வியாகுல அன்னை தேவாலயம், சமூகநலக் கூடம் உள்ளிட்டவை இடியும் நிலையில் உள்ளன. இதையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மீனவர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி, பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்டன்துறை பகுதியை, முன்சிறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் லதா, ஜினு ஆன்டணி உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
இந்தப் பாதிப்புகள் குறித்து மார்த்தாண்டன்துறை பங்குத்தந்தை அசிசி ஜான் கூறுகையில், இங்குள்ள நூற்றாண்டு பழைமையான பள்ளி, தேவாலயம் உள்ளிட்டவை இடியும் நிலையில் உள்ளன. கடலரிப்பால் பாதிக்கப்பட்ட இப்பகுதியை பாதுகாக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.