குன்னூரில் இருந்து அரவேணு செல்லும் சாலையில், இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்துகொண்டு சென்ற கரடியை சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை கண்டு மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள வனப் பகுதிகளில் இருந்து சமீபகாலமாக வன விலங்குகள் தண்ணீர், உணவைத் தேடி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. வன விலங்குகளை வனத் துறையினர் காட்டுக்குள் துரத்தினாலும் மீண்டும் அவை வந்து விடுகின்றன.
குன்னூரில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் அளக்கரை பெந்தன் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்துகொண்டு தாய் கரடி ஒன்று வெகு நேரம் அங்கேயே புதன்கிழமை சுற்றித் திரிந்தது.
அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் கரடி சாலையைக் கடக்கும் வரை வாகனங்களை நிறுத்தி வழிவிட்டனர். மேலும் இந்தக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் செல்லிடப்பேசியில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.