பழனி மலைக்கோயில் உண்டியல்கள் பசலி முடிவுக்காக புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் சுமார் ரூ.1 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் 20 நாள்களுக்கு ஒருமுறையும், திருவிழா காலங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறையும் எண்ணப்படுகின்றன.
இதனிடையே ஆண்டுதோறும் பசலி கணக்கு முடிவுக்காக அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி புதன்கிழமை பசலி கணக்கு முடிவுக்காக உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரொக்கம் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 47 ஆயிரத்து 840 கிடைத்தது. தங்கம் 491 கிராமும், வெள்ளி 16 ஆயிரத்து 990 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள் 404-ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல்கள், நவதானியப் பொருள்கள், ஏலக்காய், பட்டுச்சேலை, கடிகாரங்கள் காணிக்கையாக வரப்பெற்றன. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோயிலில் கடந்த 50 நாள்களுக்குள் சுமார் நான்கு முறை உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இந்த 50 நாள்கள் உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கம் சுமார் ரூ.5 ஐந்து கோடியே 18 லட்சத்து 42 ஆயிரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், மேலாளர் உமா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.