ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்ந்து நிலுவையில் இருப்பதால் வரும் திங்கள்கிழமை (ஜூலை 1) மருத்துவர் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி, அன்றைய தினம் கருப்புச் சட்டை அணிந்து பணியாற்றப் போவதாக அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) தலைவர் லட்சுமி நரசிம்மன், நிர்வாகி பெருமாள் பிள்ளை ஆகியோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சுகாதாரத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும், சர்வதேச தரத்தில் மருத்துவ சேவைகள் இங்கு இருப்பதாகவும் அரசு தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிலையை எட்டுவதற்காக அனுதினமும் பாடுபடும் அரசு மருத்துவர்களின் ஊதியம் மட்டும் மற்ற மாநிலங்களில் வழங்குவதைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது.
ஊதிய உயர்வு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், அதற்கு எந்த விதமான பலனும் இல்லை. இந்த விவகாரத்தில் எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக வரும் ஜூலை 1-ஆம் தேதி மருத்துவர் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம். அன்றைய தினம் தர்னா போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். அனைத்து மருத்துவர்களும் கருப்புச் சட்டை அணிந்து பணியாற்ற உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.