சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு ராஜ நாகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன .
வண்டலூரில் தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு யானைகள், சிங்கங்கள், புலிகள், பறவைகள், ஊர்வனவைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவுக்கு ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இரண்டு ராஜ நாகங்கள்: இந்நிலையில், கர்நாடக மாநிலம் பிலிக்குலா உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின்கீழ், ஒரு ஆண் ராஜ நாகம், ஒரு பெண் ராஜநாகம் என இரண்டு ராஜ நாகங்கள் வண்டலூர் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல், இங்கிருந்து ஒரு ஆண் காட்டு மாடு, ஒரு பெண் காட்டு மாடு வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், "இந்தப் பாம்புகளுக்கென பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூண்டில் குறைவான வெப்பநிலை, மூங்கில் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட தரைப்பகுதி, இரண்டு வெப்பம் கடத்தா மரப்பெட்டிகள், பெரிய மண் பானைகள், இரண்டு சிறிய நீரோடைகள், பாம்புகள் ஏறுவதற்கு வசதியாக மரங்கள், தோலுரிப்பதற்கு வசதியாக கற்பாறைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாம்புகளை பொதுமக்கள் கண்ணாடி வழியாகப் பார்வையிடலாம் என்றனர்.