வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனா அல்லது திமுகவுடனா என மதில்மேல் பூனையாய் இருந்த தேமுதிக, கட்சியின் தலைவர் விஜயகாந்தின் ஆலோசனைக்கு பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பின்னர் முதல்முறையாக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவர் தலைமையில் வரும் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக என இரு பக்கத்திற்கும் போக்குகாட்டி வந்த தேமுதிக, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவிடம் இருந்து மக்களவை தேர்தலில் 5 தொகுதிகளும், மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடமும் கேட்டுப் பெறுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு எந்தெந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது? எந்தெந்தத் தொகுதிகளை கேட்டுப் பெறலாம்? உள்ளிட்டவை குறித்து விஜயகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்று அல்லது நாளை மாலைக்குள் கூட்டணி குறித்த அறிவிப்பை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும், விரைவில் அதிமுகவுடன் முறைப்படி தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.