தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக வரும் மார்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஜனவரி மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட விடியோ ஒன்றை மையமாக வைத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி மு.க.ஸ்டாலின் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக வரும் மார்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.