அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு அவினாசியை அடுத்த நாதம்பாளையம் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டப்பணிகளை தொடக்கி வைத்திருக்கிறார். கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவை முதல்வர் பழனிசாமி நனவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோதே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதன்பிறகு, கடந்த 60 ஆண்டுகளில் இத்திட்டம் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி. அவர் இப்போதும் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு விவசாயியால் தான் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில்தான் கொங்கு மண்டல விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான பணிகளை தொடக்கி வைத்துள்ளார்.
இந்த வளமையான திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் உழவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.