சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் தமிழாய்வுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
நிறைவு விழாவையொட்டி, ந.மணிமொழியனார் அறக்கட்டளைச் சார்பில், உலக நாடுகளில் தமிழரின் தொன்மை எனும் தலைப்பில் கடலியல் ஆய்வாளர் ஒடிஸாபாலு பேசினார். இதையடுத்து, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன முன்னாள் இணை இயக்குநர் பொன்.சுப்பையா குழுவினர் சார்பில், செவ்வியல் மற்றும் தற்கால தமிழ் வினை வேர்கள் தலைப்பில் சொற்பொழிவும், அது தொடர்பான நூலும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து, தென் சென்னை மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் ஆகியோர் பேசினர். வாணியம்பாடி யுனானி தமிழ் மருத்துவர் அக்பர்கௌசர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் யுனானி மருத்துவம் தொடர்பான அறக்கட்டளையைத் தொடங்குவதற்காக ரூ. 3 லட்சம் நன்கொடை வழங்கினார்.