இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஸ்மார்ட் வகுப்புகள் சென்னை, நாமக்கல், கொடுவெள்ளி ஆகிய தொழில்நுட்ப கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழா, விடுதி நாள் விழாவில் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து, அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவத்துக்கு 360 இடங்களும், தொழில்நுட்பக் கல்விக்கு 80 இடங்களும் வழக்கம் போல மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பால்வள தொழில்நுட்ப படிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் 20 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அம்மா ஆம்புலன்ஸ் கால்நடை மருத்துவ அவசர சிகிச்சை வாகனம், நாமக்கல், ஒரத்தநாடு, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தலா 2 வாகனங்கள் இயங்கி வருகிறது.
அதில் பணியில் உள்ள கால்நடை மருத்துவர்கள், உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் இனப்பெருக்கத்துக்குத் தேவையான மருத்துவ உதவிகளை கால்நடை வளர்ப்போருக்கு அளித்து வருகின்றனர்.
சென்னை, நாமக்கல், கொடுவெள்ளி கால்நடை தொழில் நுட்பக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்றார்.