சென்னை: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
விரைவில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஒதுக்கப்பட்டதால் அதை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கினால் கூட்டணியில் சேருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிபந்தனை விதித்தார். ஆனால் தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் தேமுதிகவிற்கு தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் இருப்பதால் எப்படியாவது அதிமுக கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பாஜர மேலிடம் அழுத்தம் கொடுத்து வருவதை அடுத்து, அதிமுக தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க சென்று திரும்பிய தேதிமுக தலைவர் விஜயகாந்த், நேற்று முதல் முறையாக கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் சேருவதற்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களை உறுப்பினர் சீட்டும் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சாதகமாக சென்று கொண்டிருக்கிறது, விரைவில் உறுதி செய்யப்படும் என்றார்.
மேலும், தமிழகத்தில் 40 தொகுதிகளில் வெல்வதும் முக்கியம், நாடு முழுவதும் தாமரையை மலரவைப்பதும் முக்கியம் என்றார் தமிழிசை.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அதிமுக வசம் 22 தொகுதிகள் இருக்கும். இதில், தமாகாவுக்கு1 தொகுதி ஒதுக்கியது போக மீதம் உள்ள 21 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.