சென்னை: நாளை விசிக, மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி உடன்பாடு கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் அறிவிக்கப்பட உள்ள மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து வருகிறது.
இதில், அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேடித் தேடி கட்சிகளைச் சேர்க்கும் பணிகளும், கூட்டணியில் இணைந்தவர்களுக்கான தொகுதி ஒதுக்கீடு குறுத்த பேச்சுவார்த்தை தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. இரு கட்சிகளிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) காலை 11 மணிக்கு அறிவாலயம் வருமாறு திமுக தரப்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.
திருமாவளவனை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவாலயம் சென்று தொகுதி உடன்பாடு செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இக்கட்சிகளிடையே வரும் திங்கள்கிழமை கூட்டணி உடன்பாடு எட்டபடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.