நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயகுமார், பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேமுதிக உயர்மட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள சூழலில், விஜயகாந்த், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அவர் பூரண குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்புடனும் பேசினார். உடல் நலத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகளையும், விருப்பத்தையும் தெரிவித்தோம்.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்குள்ளாக நல்ல முடிவு எடுக்கப்படும். 6-ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவு குறித்து உரிய முறையில் அறிவிக்கப்படும்.
அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைத்து தலைவர்களும் பங்கேற்கிறோம். இந்த மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிச்சயம் இருப்பார் என்று தெரிவித்தார்.