எழும்பூர்-கொல்லம் இடையே தினசரி ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (மார்ச் 5 ) தொடங்குவதையடுத்து பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் புனலூரிலிருந்து செங்கோட்டை இடையே உள்ள சுமார் 49 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் சுமார் ரூ.450 கோடியில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. கடந்த 2018 ஜன.,31 இல் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மார்ச் 31 முதல் தாம்பரம் -கொல்லம் இடையே இரு மார்க்கத்திலும், வாரத்தில் 3 நாள்கள் மட்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டுமென ரயில் பயணிகளும், பொது மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மார்ச் 5 முதல் தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்( 16101) சென்னை எழும்பூரிலிருந்து தினமும் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும், மறுமார்க்கத்தில் (16102) கொல்லத்திலிருந்து காலை 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை சென்னை எழும்பூரை 3.30 க்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ரயிலில் குளிர் சாதன வசதியுடைய பெட்டிகளும், 2 ஆம் வகுப்பு முன் பதிவு பெட்டிகளும், முன் பதிவற்ற பெட்டிகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன. சென்னையிலிருந்து மதுரை வழியாக செங்கோட்டை வழித்தடத்தில் இரவு நேர ரயில்சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு தொடங்கப் பட்டுள்ளதால், தென் மாவட்ட மக்களும், பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.