கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய்நலப் பெட்டகம் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு சுகாதார நலத் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
பிறப்பு - இறப்புச் சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறையையும் அவர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்க உள்ளார். எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் நடைபெறவுள்ள இதற்கான விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1,300 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், கிராம சுகாதாரச் செவிலியர்களுக்கு கையடக்கக் கணினிகளையும் முதல்வர் வழங்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகத் தகவல் மேலாண்மை அமைப்பினையும் அவர் தொடங்கி வைக்கிறார்.