சென்னை: திமுக கூட்டணியில் இணையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
தொகுதி உடன்பாட்டில் திருமாவளவனும், மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டு பரஸ்பரம் ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இணையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று பார்த்தால், மக்களவைத் தேர்தலில் நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நாளை மாலைக்குள் அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்துவிடும் என்று திமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இணையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.