திமுகவில் ஒரு தொண்டர் தலைவராகவோ, முதல்வராகவோ ஆக முடியுமா? என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்ட அதிமுக சார்பில் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை 71 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து பேசுகையில், தமது பிறந்த நாளின் போது ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் வழங்கும் நலத்திட்ட உதவிகளை கவனித்து வருகிறார் ஜெயலலிதா.
அதிமுக தொண்டர்களின் கட்சி. தொண்டர்களை அதிமுகவில் முதல்வராக மாற்ற முடியும். திமுகவில் ஒரு தொண்டர் தலைவராகவோ, முதல்வராகவோ ஆக முடியுமா? என்று கேள்வி எழுப்பியவர், திமுக - காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி என்றார்.
கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி பூத்து குலுங்குகிறது. மின்வெட்டு இன்றி ஒளிமயமாக திகழ்கிறது. சட்டம், ஒழுங்கு அமைதியைப் பேணி பாதுகாக்கிற மாநிலம் தமிழகம் என விருதுகள் பெறப்பட்டுள்ளன என்றார்.