தேமுதிக தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தை சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது: விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் சுறுசுறுப்பாக வலிமை பொருந்தியவராகத் தெரிகிறார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அரசியலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய கருத்துகளை கேட்டுக் கொண்டேன். என்னுடைய கருத்துகளை அவரிடம் தெரிவித்தேன். ஆனால், விஜயகாந்த் தான் முடிவு எடுக்க வேண்டும். சமகவைப் பொருத்தவை தனித்துப் போட்டியா, கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பதை மார்ச் 5-ஆம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பேன். ரஜினியும், கமலும் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விஷால் கூறியிருப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக கூட்டணி அமைக்க முயற்சியா என்று சிலர் கேட்கின்றனர். ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கூட்டணிக்காக நான் பேரம் பேசும் நபர் இல்லை. பணம் கொடுங்கள், சீட்டு கொடுங்கள் என்று கேட்பதில்லை. மற்றவர்கள் கேட்பது பற்றி எனக்குத் தெரியாது. அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்திருப்பது பற்றி சொல்லவேண்டும் எனில் மாற்றம், முன்னேற்றம் ஏமாற்றம்தான் என்றார்.