விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி உயிரிழந்தார். மரக்காணம் அருகே கூனிமேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (53), ஆம் ஆத்மி கட்சியின், விழுப்புரம் மாவட்டத் துணைச் செயலர். இவர், இரு சக்கர வாகனத்தில், சுப்பிரமணியன் (60) என்பவருடன் புதன்கிழமை இரவில் ஏடிஎம் மையத்துக்குச் சென்ற போது, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், ஹரிகிருஷ்ணன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த சுப்பிரமணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.