மாதாந்திர உதவித்தொகை: தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான மாத உதவித் தொகை பெற பின்வரும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ் வளர்ச்சித்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2019-20 -ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்த, ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது, ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள், தமிழறிஞர்கள் இருவரிடம் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை நேரில் பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இருந்தும், இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின்கீழ், தேர்வு செய்யப்படுபவருக்கு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, ரூ.500 மருத்துவப்படி மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை ஆகியவை, வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டங்களில், ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள், மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமாக அனுப்ப வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600008 - என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044- 28190412, 044-28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்படப்பட்டுள்ளது.