விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியை உள்பட 4 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
திருக்கோவிலூரை அடுத்த ஆயந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் நான்கு பேரும் பள்ளிக்கு சரியாக பணிக்கு வருவதில்லையாம்.
கடந்த புதன்கிழமை உதவி ஆசிரியர்கள் 3 பேரும் விடுப்பு எடுத்துக்கொண்டனராம். அன்று தலைமை ஆசிரியை வெகுநேரமாகியும் பள்ளிக்கு வரவில்லையாம். இதுகுறித்து அந்த கிராம மக்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில், திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் த.விஜயலட்சுமி பள்ளிக்கு நேரில் வந்து விசாரித்தார்.
அப்போது, காலை 11 மணிக்கு மேல் தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலர் புஷ்பராணி ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். ஒழுங்கு நடவடிக்கையாக, தலைமை ஆசிரியை கலைச்செல்வி, உதவி ஆசிரியர்கள் மார்கிரேட் மார்தா, சகாயமேரி, குமாரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு, கல்வி மாவட்ட அலுவலர் விஜயலட்சுமி வியாழக்கிழமை நோட்டீஸ் கொடுத்தார்.