சென்னை: பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ தொடர்பில்லை என்று, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன், பேஸ்புக் மூலம் பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு என்னும் வாலிபன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொடபிருப்பதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன் குற்றவாளிகளை பாதுகாக்க அதிமுக முயல்வதாகவும் கூறப்பட்டது.
அதேசமயம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் 'பொள்ளாச்சி' நாகராஜ் என்பவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையைகம் திங்கள் மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ தொடர்பில்லை என்று, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள் மாலை பேசிய அவர் கூறியதாவது:
தேர்தல் சமயம் என்பதால் இந்த விவகாரத்தில் என் மீது திட்டமிட்டு திமுக அவதூறு பிரசாரம் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ தொடர்பில்லை
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக சொல்கிறோம்.
குறிப்பாகச் சொல்வதென்றால் முதன்முதலில் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது நான்தான்.
பின்னர் கடந்த மாதம் 27- ஆம் தேதி எங்கள் கட்சி எம்.பி தலைமையில் மாவட்ட எஸ்.பியிடம் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த அந்த குழுவில் எனது மகனும் இருந்தார். பின்னர் நான் இது தொடர்பாக அச்சு ஊடகங்களில் பேட்டியும் அளித்துள்ளேன்.
தற்போது என் மீது தேர்தல் ஆனையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இவ்வாறு திட்டமிட்டு என் மீது அவதூறு செய்பவர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளேன்.
குற்றவாளிகள் யாரையும் அதிமுக பாதுகாக்கவில்லை. அப்படி எதுவும் செய்யாது.
இது எல்லாமே திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உத்தரவில் நிகழும் காரியங்கள் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.