மதுரையை அடுத்த சக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 900-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. இவற்றை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரையை அடுத்த சக்குடியில் உள்ள முப்பிலி சுவாமி கோயில் சிவராத்திரி விழா நிறைவடைந்து, அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, சக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். நான்கு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் இருந்து 900-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றிருந்தன. இதே போன்று 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் கோயில் காளையைத் தொடர்ந்து, பல்வேறு காளைகள் சீறிப் பாய்ந்தன. அவைகளை அடக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் திணறினர்.
இதில் 45 முதல் 50 காளைகளை மட்டுமே மாடுபிடி வீரர்களால் அடக்க முடிந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், பீரோ, கட்டில், சைக்கிள், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.