கோவை: பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் ராஜாமணியின் உத்தரவின் பேரில், கொடுஞ்செயலில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச விடியோ எடுத்து அத்துமீறிய வழக்கில் திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு மகினாம்பட்டி பகுதியில் காவல்துறையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பேஸ்புக் மூலம் பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம், நகைகளைப் பறித்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 12ஆம் தேதி கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று ஆபாச விடியோ எடுத்து அத்துமீற முயன்றதாக சபரி (எ) ரிஷ்வந்த் உள்பட மூன்று பேர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சபரி (எ) ரிஷ்வந்த்தின் நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட போது, அவர்கள் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச விடியோக்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அப்போதுதான், இவர்கள் இதுபோன்று ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.