பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய் காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதேசமயம் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தரப்பில் பேரணி நடத்தப்பட்டது. பேரணி முடிவில் பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு அளித்தனர்.
பேரணியில் அக்கட்சியின் சார்பாக நடிகை ஸ்ரீபிரியா, கவிஞர் சிநேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.