தேஜாஸ் ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா? இந்த விஷயம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜாஸ் விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேஜாஸ் ரயிலில் பயணம் செய்யப் போறீங்களா? இந்த விஷயம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்


சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜாஸ் விரைவு ரயில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தேஜாஸ் விரைவு ரயிலில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் பயணிகளுக்கு இன்னும் பரிச்சயமாகாததால் சில பல அவதிக்கும் ஆளாகிறார்கள்.

அதாவது முதல் விஷயம் என்னவென்றால், தேஜாஸ் விரைவு ரயில் சென்னை மற்றும் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு சரியாக 5 நிமிடத்துக்கு முன்பு அனைத்து பெட்டிகளின் கதவுகளும் தானாகவே மூடிக் கொள்ளும். இதனை பயணிகளே நினைத்தாலும் திறக்க முடியாது என்பதுதான்.

பயணிகளின் பாதுகாப்புக் கருதியும், கடைசி நேரத்தில் ஓடி வந்து ஏற முயல்வதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தேஜாஸ் ரயிலில் இதுபோன்ற தொழில்நுட்பம் இருப்பதை பல பயணிகளும் அறிவதில்லை.

கடந்த திங்கட்கிழமை 55 வயது நபரும், அவரது மகளும் மதுரை செல்ல டிக்கெட் புக் செய்திருந்தனர். சென்னை எழும்பூரில் இருந்து காலை 6  மணிக்கு வண்டி புறப்பட வேண்டும். சரியாக 5.53 மணிக்கு அந்த நபர் ரயிலில்  இருந்து இறங்கி, ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்த கடையில் குடிநீர் பாட்டில் வாங்கிக் கொண்டு ரயில் பெட்டிக்குத் திரும்புகிறார். ஆனால் அப்போது மணி 5.55 ஆகிவிட்டதால், ரயில் பெட்டியின் கதவுகள் மூடிக் கொண்டன. கதவுகளைத் திறக்க முடியாமல் அந்த நபரும், உள்ளே இருக்கும் மகளும் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. கடைசியில் அவர் அந்த ரயிலை தவற விடுகிறார்.

இதுபோன்று ஏராளமான பயணிகள் ரயிலை தவறவிடும் நிலைக்கு ஆளாகின்றனர்.

எனவே, தமிழகத்தில் தானியங்கி கதவுகள் கொண்ட முதல் ரயில் இதுவென்பதால், இது குறித்து ரயில்வே பயணிகளுக்கு அறிவிக்க வேண்டும். முன்கூட்டியே அறிவித்தால் பலருக்கும் இந்த நிலை ஏற்படாது.

அப்படியே கதவு முடிக் கொண்டாலும் பயணிகளால் கதவினை திறக்கும் வசதியாவது இருக்க வேண்டும்.

கதவுக்கு அருகே ஒலிபான்களை அமைத்து அதற்கான சமிக்ஞையாவது தரப்பட வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில் மார்ச் 1ம் தேதி முதல் சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வருகிறது.

தேஜாஸ் ரயிலில் பயணிப்பதாக இருந்தால் இதனை நீங்கள் நிச்சயம் மறக்க மாட்டீர்கள் அல்லவா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com