உள்தமிழகத்தின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை வறண்ட வானிலை காணப்படும். மேலும், உள் தமிழகத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் வழக்கத்தைவிட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றார் அவர்.
தமிழகத்தில், சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக, சேலத்தில் 102 டிகிரி வெப்பம் பதிவானது. தருமபுரியில் 101 டிகிரியும், திருத்தணியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. மதுரை விமானநிலையத்தில் 99 டிகிரியும், வேலூரில் 98 டிகிரியும் பதிவானது.