கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, ராமேசுவரம் மீனவர்கள் புதன்கிழமை (மார்ச் 13) முதல் நான்கு நாள்கள் மீன்பிடிக்க மீன்வளத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
இந்திய, இலங்கை தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக நடைபெற்று வரும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விசைப் படகுகளில் 2,200 பக்தர்கள், நாட்டுப் படகுகளில் 225 பக்தர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் மார்ச் 15-ஆம் தேதி காலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கச்சத்தீவு செல்ல உள்ளனர்.
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல புதன்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விழாவையொட்டி மத்திய, மாநில உளவுத் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் தலைமையில் பொறியாளர் அய்யனார் மற்றும் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் ஐயப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.