உள்தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு
உள்தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வறண்ட வானிலை காணப்படும். மேலும், உள் தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
5 இடங்களில் வெயில் சதம்:
தமிழகத்தில் 5 இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தருமபுரி, மதுரை விமானநிலையம், நாமக்கல், சேலத்தில் தலா 100 டிகிரியும், திருச்சியில் 99 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.