ஜெயலலிதா நினைவிடம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, அரசு செலவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. 
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தது. மேலும், இந்த விஷயத்தில் அரசுக்கு கொள்கை முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி  உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரத்தில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. மரணித்ததால் குற்றவாளியா? இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com