தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்
தேர்தல் வழக்கு விசாரணைக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 84 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் தேர்தலில் பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை.
எனவே மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும். அதே போல் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு எனக்கூறி வாக்காளர்கள் பலரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் ஆஜரானார்.
அவரது தரப்பு சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக விசாரணையை வரும் மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.