காணாமல்போன சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் குறித்து, பொதுமக்கள் தகவல் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் ரெ.முகிலன் (52). சூழலியல் செயல்பாட்டாளரான இவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். பின்னர் அவர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்றார். அதன் பிறகு, முகிலனைப் பற்றி எந்த தகவலும் இல்லை.
அதேவேளையில் முகிலன், மதுரையும் செல்லவில்லை. மேலும் அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. முகிலன் காணாமல்போனது இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் முகிலனை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தினர். மேலும் சில அமைப்புகள், முகிலனை மீட்டுத் தருமாறு போராட்டமும் அறிவித்துள்ளன. இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி முகிலன் காணாமல்போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
தகவல் அளித்தால் வெகுமதி: இந்நிலையில் காணாமல்போன முகிலனை கண்டுபிடிக்கும் வகையில் தகவல் அளிப்பவர் களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. அளிக்க விரும்பும் பொதுமக்கள் 044-28513500 மற்றும் 99629 08908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் சுவ ரொட்டிகள் ஒட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.