அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவுற்றதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்புகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பது குறித்த முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது. மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தும் இந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்புகள் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வரும் என்று தெரிவித்திருந்தார்.