தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. ஆனால், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமையும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமையும் விஜயகாந்தை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர்.