புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை 3 வார காலத்துக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் கடந்த 2011-ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ரகுபதி ஆணையம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், ரகுபதி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரியும் 3 பேரின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தனி நீதிபதி, ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து, ஆணையத்தின் ஆவணங்களைப் பரிசீலித்து தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில், ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர்.ரகுபதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை 3 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.