மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட உள்ளார்.
மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக போட்டியிடும் தொகுதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்தத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
தூத்துக்குடி தொகுதிக்கு, மாநிலங்களவைக் குழு திமுக தலைவர் கனிமொழியிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அந்தத் தொகுதியில், அவரைத் தவிர வேறு யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. ஆகவே, கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்படுவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.
இன்று அறிவிப்பு: இந்த நிலையில், 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் ஞாயிறுக்கிழமை காலை 11 மணியளவில் அறிவிக்க உள்ளார்.
அத்துடன், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களையும் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.