பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவுக்காக அழைத்து வரப்பட்ட வளர்ப்பு யானை லாரியில் இருந்து கீழே இறக்கும்போது தவறி விழுந்ததில் காயமடைந்தது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் குலாபி (56) என்ற யானையை வளர்த்து வருகிறார். இந்த யானையை கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள திருமண விழாவுக்காக லாரி மூலம் சனிக்கிழமை அழைத்து வந்துள்ளார். பின்னர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் லாரியில் இருந்து கீழே இறக்கும்போது யானை தவறி கீழே விழுந்துள்ளது.
இதில் தவறி விழுந்த யானை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எழுந்து நிற்க முடியாமல் படுத்த நிலையிலேயே கிடந்துள்ளது. இதனால், யானையைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் கிரேன் உதவியுடன் யானை தூக்கி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, யானை மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. சிறிது நேரத்தில் யானை இயல்பு நிலைக்குத் திரும்பியது. கீழே விழுந்ததில் யானைக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் யானைக்கு தர்பூசணி, வாழைப் பழம் போன்றவற்றை வழங்கினர். யானையுடன் அதன் பாகன் அக்பர் அலி என்பவர் வந்திருந்தார்.