போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்படையினருடன் சேர்ந்து கூட்டு ரோந்துப் பணியை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக இலங்கை வடக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி பி.எஸ்.டி.சில்வா கூறினார்.
கச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் சனிக்கிழமை காலை பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 2.5 டன் போதைப் பொருள்களை கைப்பற்றியுள்ளோம்.
கடந்த 10 வாரங்களில் மட்டும் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடத்தலைத் தடுப்பதற்காக இந்திய கடற்படையினருடன் தற்போது தகவல் தொடர்பு கொண்டு இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இரு நாட்டு கடற்படையினரும் இணைந்து ரோந்து செல்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழையும் போது மட்டுமே கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்கிறோம். எந்தச் சூழலிலும் இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை நுழைந்து மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றார்.
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதி கடலில் 5-க்கும் மேற்பட்ட பெரிய ரோந்து கப்பல்களும், 5-க்கும் மேற்பட்ட சிறிய ரோந்துக் கப்பல்களும் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றையும் கடற்படைத் தளபதி டி.சில்வா பார்வையிட்டார்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தமிழகத்திலிருந்து கச்சத்தீவுக்கு வந்த படகுகள் குறித்தும் அவர் கடற்படை அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.