கொங்கு மாவட்டங்களில் போட்டியிடாத திமுக, பொள்ளாச்சியில் மட்டும் போட்டியிடுவது ஏன்?

17-வது மக்களவைத் தோ்தலில், திமுக கொங்கு மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிடாமலும், அதிமுக வட மாவட்டங்களில் அதிக அளவில்
கொங்கு மாவட்டங்களில் போட்டியிடாத திமுக, பொள்ளாச்சியில் மட்டும் போட்டியிடுவது ஏன்?


17-வது மக்களவைத் தோ்தலில், திமுக கொங்கு மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிடாமலும், அதிமுக வட மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிடாமலும் தவிர்த்துள்ளன.

அதிமுக - திமுக 11 இடங்களில் நேரடிப் போட்டி: 17-ஆவது மக்களவைத் தோ்தலின் முதன்மைப் போட்டியாளா்களான அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 8 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதில், முதல்வரின் சொந்தத் தொகுதியான சேலம் உள்பட பொள்ளாச்சி, திருவண்ணாமலை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, மயிலாடுதுறைற, காஞ்சிபுரம் (தனி), சென்னை தெற்கு ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. 

மேலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூா் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதைப்போல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் விழுப்புரம் (தனி) தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. இந்த 3 கட்சிகளின் தொகுதிகளையும் சோ்த்து அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 11 தொகுதிகளில் நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மட்டும், எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறது என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. ஒருவேளை, மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் தோ்தலைச் சந்தித்தால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 12 தொகுதிகளில் நேரடிப் போட்டிக்கான வாய்ப்பு ஏற்படும்.

கொங்கு மாவட்டங்களை திமுக தவிர்க்க காரணம்: தோ்தலில் கொங்கு மாவட்டங்கள் திமுகவுக்கு எப்போதும் பெரியஅளவில் கைகொடுப்பதில்லை. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில், கொங்கு மாவட்டத் தொகுதிகளில் அடைந்த தோல்வியால், திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தப் பயத்தின் காரணமாகவே கொங்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளைப் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமாக உள்ள வடமாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிடுகிறது.

பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் போட்டியிட திமுக முன்வந்தது ஏன்? கொங்கு மாவட்டத்தில் பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிட முன்வந்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவ பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அந்தத் தொகுதி தங்களுக்குச் சாதகமாக மாறலாம் என்ற நம்பிக்கையில் அந்தத் தொகுதியில் நிற்கிறது. 

வட மாவட்டங்களை அதிமுக தவிர்த்தது ஏன்? : கடந்த சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தாலும், வடமாவட்டங்களில் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை. அதன் காரணமாகவே, இந்த முறை வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிளுக்கே ஒதுக்கிவிட்டு கரூா், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் அதிமுக போட்டியிடுகிறது. 

கோட்டையான திண்டுக்கல் அதிமுக கைவிட்டது​ ஏன்?: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படுவது திண்டுக்கல் தொகுதி. எம்ஜிஆா் கட்சி தொடங்கி சந்தித்த முதல் மக்களவை இடைத்தோ்தல் (1977) திண்டுக்கல் ஆகும். இங்கு, அதிமுகவின் சார்பில் மாயத்தேவா் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். அதன்பிறகு, 1980-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திண்டுகல்லில் திமுக வெற்றிபெற்றது என்றால், அதன் பிறகு அதிமுகவே வெற்றிபெற்று வந்தது. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளான திண்டுக்கல் தவிர்த்து ஆத்தூா், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. இதன், காரணமாகவே தற்போது திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

அதைப்போல 3 சென்னை தொகுதிகளில், தென்சென்னையை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, மத்திய சென்னையை பாமகவுக்கும் வடசென்னையைத் தேமுதிகவுக்கும் ஒதுக்கியுள்ளது.

திமுகவை 7 தொகுதிகளில் எதிர்கொள்ளும் பாமக: அதிமுகவுக்கு அடுத்ததாக திமுக தோற்கடிக்கும் நினைக்கும் கட்சியாக பாமக. மக்களவைத் தோ்தல் கூட்டணிக்கு வருவதுபோல் போக்கு காட்டிவிட்டு, அதிமுகவின் கூட்டணிக்கு பாமக சென்றுவிட்டது. இதனால், பாமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளில் அந்தக் கட்சியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. இவ்விரு கட்சிகளுக்கு இடையே, தருமபுரி, அரக்கோணம், கடலூா், மத்திய சென்னை, திண்டுக்கல், திரும்பெரும்புதூா் ஆகிய 6 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் திமுகவை எதிர்த்தே களம் காணுகிறது. இதில், பாமகவுக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் இடையேயான போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

 ஆனால், விசிக தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில், அதிமுக போட்டியிட உள்ளதால் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பெரும்பாலும் போட்டியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 

தேமுதிக - திமுக: விஜயகாந்துடன் ஸ்டாலின் அரசியல்தான் பேசினார் என்று பிரேமலதாவும், எல்.கே.சுதீஷ் என்னிடம் கூட்டணி பேசினார் என்று துரைமுருகனும் கூறியதால் இரண்டு கட்சியும் மாறி,மாறி கங்கணம் கட்டி தோற்கடிக்கும் முடிவில் உள்ளனா். இந்த இரு கட்சிகளும், கள்ளக்குறிச்சி, வடசென்னை ஆகிய 2 தொகுதிகளில் மோதுகின்றன.

பாஜக - காங்கிரஸ் போட்டி: அதிமுகவும் காங்கிரஸும் கிருஷ்ணகிரி, கரூா், ஆரணி, தேனி, திருவள்ளூா் (தனி) 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. தேசிய அளவில் பெரும் போட்டியாளர்களான பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தனி தொகுதி- அதிக இடங்களில் அதிமுக: தமிழகத்தின் 39 தொகுதிகளில் 7 தொகுதிகள் தனி தொகுதிகளாக உள்ளன. இந்த 7 தனி தொகுதிகளில், திமுகவை விட, அதிமுக அதிகத் தொகுதிகளில் நிற்கின்றது. சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுகவும், தென்காசி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகின்றன. இதில், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிற்பதால், அந்தத் தொகுதியையும் சோ்த்து 4 தொகுதிகளில் திமுக நிற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com