திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயியை, டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, சென்னை 2-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்தார். இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த 2018-இல் அவர் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை 2-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மயி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.முருகேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து சங்கத்துக்கான நுழைவுக் கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் உள்ளிட்டவற்றை சின்மயி செலுத்தி உள்ளார். மேலும், 2018-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என ஆதாரங்களுடன் வாதிட்டார்.
இதையடுத்து, சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்ராதாரவி ஆகியோர், மார்ச் 25-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.