கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பிரதான சற்றுலாத் தலங்களாக கன்னியாகுமரி, வட்டக் கோட்டை, சொத்தவிளை, தெக்குறிச்சி, முட்டம், பத்தமநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
இதையொட்டி, குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகுந்திருக்கும். இதனிடையே, ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களிலும் சுத்தம், சுகாதாரத்தை பேணும் வகையிலான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்றும், குறிப்பாக சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம், பாதுகாப்பு, குடிநீர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் விரைந்து செயல்படுத்த வேண்டுமென்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கைவிட வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றனர். கூடுதல் பாதுகாப்பு தேவை: முக்கிய சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தின் பல இடங்களில் சேதமடைந்து காணப்படும் கைப்பிடி சுவர்களைச் சீரமைக்க வேண்டும்; தொட்டிப்பாலத்தின் அடியில் உள்ள பூங்காவில் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்; பூங்காவில் உள்ள விலங்குகளின் உருவங்களுக்கு வர்ணம் பூச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.