சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் மார்ச் 4-ஆம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, கோயிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது.
விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகு மாரியம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர், தாரை, தப்பட்டை முழங்க மேளதாளங்களுடன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.
குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை நடத்தி மலர்களை தூவி குண்டம் வளர்க்கப்பட்டு, அதிகாலை 4.10 மணிக்கு பூசாரி செந்தில்குமார் முதலில் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார்.
அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா, அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள், வனத் துறையினர் என ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர். பிற்பகலில் கால்நடைகள் குண்டம் இறங்கின. குண்டம் இறங்கிய பக்தர்கள் கோயிலுக்குள் நேரடியாகச் சென்று அம்மனை தரிசித்தனர்.